Sunday 15 March 2015

சிவ ஒளி தீபாவளி இதழ் 2014ல் பிரசுரமாகிய கோயிலைப்பற்றிய கட்டுரை

சிவ ஒளி தீபாவளி இதழ் 2014ல் பிரசுரமாகிய கோயிலைப்பற்றிய கட்டுரை

" மூர்த்திகள் கீர்த்தியுற்ற தீர்த்தகரை தேடிடுவர் !                                             மூர்த்தியும் பூர்த்தியாய் தீர்க்கமாய்த் தெளிந்திடுவர் !                                    மூர்த்தியவர் தேர்வாகத் தீர்வாக அமர்ந்திடுவர் !                                                        மூர்த்தியாய் ஏற்றமுறப் போற்றுதலை அருளிடுவர் ! "
என்ற தேர்ந்த பாடலின் வரிகளுக்கு ஏற்ப, நதிக்கரையும், பூஞ்சோலையும், குருமார்களின் புண்ணிய இருப்பிடங்களையும், திருத்தலங்களையும் தேர்ந்து, குருவருளும், திருவருளும் விளங்கிட, மூர்த்திகளும், ஞானிகளும், புண்ணிய மகான்களும் எப்போதும் அமர்ந்து தீடசண்ய நோக்கோடு அருள்பாலிப்பது நமக்கெல்லாம் கண்கூடாக, இக்கலியுகத்தில் நடைபெறும் பேருண்மை என்பது தெரிந்ததே!
அங்ஙனம் சத்குரு சாயிநாத மகாராஜர், ஸ்ரீரங்கத் திருத்தலத்தில், கடந்த 25 ஆண்டுகளாக பௌர்ணமி பூஜையும், சித்ரா பௌர்ணமியும், சிறப்பாக நடத்தப் பட்டு, வில்வம், வேம்பு, அத்தி, வன்னி, இலுப்பை, நாகலிங்கம், மா, தென்னை, ருத்திராட்சம், வாதாம் முதலான தேவ விருட்சங்களும், பூச்செடிகளும் நிறைந்த தோப்பும், சோலையுமான நிழலாடுமிடத்தில், காவிரித்தாயின் மடியில் கல்லணை செல்லும் வழியில் திருவானைக்கோவிலை சார்ந்த திம்மராய சமுத்திரம் என்னும் இடத்தில் கவினுறும் 1.6 ஏக்கர் நிலப்பரப்பைத் தேர்ந்து, இயற்கையாக நெல்லியும், வேம்பும் இணைந்து வளர்ந்த மேடையில், விஷ்ணுவும், சிவமும் இணைந்த விருட்சமாக, மகாலெட்சுமியின் சொரூபமாக விளங்கும் குருஸ்தானில் எழுந்தருளி 26.01.2013ல் சோலைக்குயிலாக பிரதிஷ்டை ஆகியுள்ளார்.
பெரும்பாலும் திருத்தலங்கள் உருவானபின், பூந்தோட்டங்களும், நந்தவனமும், ஸ்தல விருட்சங்களும் அமைத்து பராமரிக்கப்படும். ஆனால் இங்கு வித்தியாச  மாக, தென்றல் தவழும், ரம்மியமான, அமைதியான, பூஞ்சோலையை தேர்ந்து, சாயிநாதர் எழுந்தருளி அருள்பாலிப்பது மிகவும் விசேடமானது. நாகலிங்க மரத்தின் விஸ்தீரணமான மேடையில் வினைதீர்க்கும் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நாகலிங்கம் பூத்துக்குலுங்கி, தெய்வீக மணம் பரப்பி வருவது, கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சத்குரு விற்குப் பொருத்தமாக ' ஸ்ரீ ரெங்கசாய் ' என்று பெயரிடப்பட்டு, ஸ்ரீரெங்கசாய் பொது நல வளாகமாக விளங்கி வருவது பெருஞ்சிறப்பு.
சீரடியில் அமைந்துள்ளபடியே, இயற்கையாக குருஸ்தானத்திற்கு பின்பாக, வற்றாத நீரூருங் கேணியும், சாயிபகவான் போற்றிய லெண்டித் தோட்டத்தைப் போன்ற பூஞ்சோலையும், இயற்கையாக இங்கு அமைந்துள்ளது அற்புதமே.  சீரடியில் பாபா அவர்கள் போற்றிய துவாரகா மந்திரையும் அமைத்து தினப்படி, காலை - 6 மணி, பகல் - 12.00, மாலை - 06.00, இரவு - 08.00 மணி என்று நான்கு காலபூஜை முறைகளும், லலிதா சகஸ்ரநாமமும், விஷ்ணு சகஸ்ரநாமமும், பாராயணம் செய்வதுடன், வருடத்தில் குருபூர்ணிமா, விஜயதசமி, ராமநவமி, சித்திரை வருடப் பிறப்பு, கோகுலாஷ்டமி, குரு பிரதிஷ்டை தினம் ஆகிய ஆறு விசேடங்களும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.பிரதிமாதம் பௌர்ணமி தினத்தன்று, சத்ய நாராயணா பூஜை வைபவமும் நடத்தப்பட்டு வருகின்றது. பிரதி ஞாயிற்றுக்கிழமையும், வியாழக் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் பெருமளவில் பல ஆயிரங்களாக பெருகி வருகிறது. இவ்விரண்டு தினங்களிலும், மூன்று வேளையும், சிறப்பான முழு அன்னதானமும் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிட த்தக்கது. இவ்விரு தினங்களிலும், நலமும் வளமும் குன்றிய சாய் அன்பர்களின் நலத்திற்காகவும், வளத்திற்காகவும் கூட்டுப்பிரார்த்தனை நடத்தப் படுகிறது. நாமத்தைப் போற்றி ஜெயிப்பதே சத்குருவின் நவீன தேர்ந்த எளிதான பக்திமார்க்கமாவதால் 1008 நாமஜெபம் செய்வதற்காக நோட்டுப் புத்தகங்கள் வழங்கி ஆன்மீக நாட்டத்தையும் நல்லருளும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் சத்குருவின் திவ்ய விருப்பமாக ஜீவராசிகள் பலவும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. மயில்கள், வாத்துகள், ஜானி என்ற நாய், மீனா என்ற பூனை ஆகியவைகள் பக்தர்களிடம்  அணுகி, அன்பு காட்டுவது உணர்வுக்கு இதமும், இன்பமும் ஊட்டுவது.
இந்த பாபாவினது ரெங்கசாயி வளாகத்தில், அறக்கட்டளையின் சார்பில், பிரமிக்கத்தக்க முறையில், பல நல வாழ்வு ஏற்பாடுகளும், முகாம்களும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை, காது கேளாமைக்கான அறுவை சிகிச்சையும், கேட்கும் கருவிகளும், மாற்றுத்திற னாளிகளுக்கான உபகரணங்களும், இரத்ததான முகாமை அரசு மருத்துவ மனை யுடனும் இணைந்து இவ்வளாகத்தில் நடத்து கிறார்கள். கண்தான விழிப்பு ணர்வை ஊக்கப்படுத்தி கண்தானத்திற்கு முன் வருவோரை தக்கபடி பதிவு செய்து கொள்கிறார்கள். பிரதி செவ்வாய், வெள்ளிகிழமைகளில் இலவச பொது ஆங்கில மருத்துவ சிகிச்சையும், மருந்துகளும் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. தீராத புற்றுநோய், குழந்தையின்மை, மனவளரச்சி குன்றிய குழந்தைகள், தீராத தலைவலி, நாளமில்லா சுரப்பிகளின் முடக்கிய செயல்பாடு கள் மற்றும் தீர்வு காண இயலாத எண்ணற்ற நோய்களுக்கும், பரம்பரை சித்த வைத்தியம் கைதேர்ந்த பரம்பரை வர்ம சித்தமருத்துவ குழுவினால் பரிசோதனை செய்யப்பட்டு பிரதி வியாழனும், ஞாயிற்றுக்கிழமை களிலும் நடத்தி, சாய்நாதரின் கருணையாலும், அருளாலும், பரிபூரண குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கண்பார்வை அற்றோருகளுக்கான சிறப்பு முகாம் கள் நடத்தி ஊக்கப்படுத்துவதோடு, உதவிகோல்கள் கொடுத்தும் உதவி வருகிறார்கள். இத்துடன் சமுதாய நலனில் முழு கவனத்துடன் சிறுவர் முதல் பெரியவர் என இருபாலரு க்கும் அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் பயனுறும் வண்ணம், தலைசிறந்த யோகப்பயிற்சியாளர்களின் தலைமையில் இலவச யோகா வகுப்புகள் பிரதி ஞாயிறன்று காலை 7 மணிக்கு கட்டுப்பாடுடன் நடத்தப்பட்டு உடலையும், உள்ளத்தையும் கட்டுக்குள் வைத்துதவ சாய் அன்பர் களுக்கு துவளாது துணை புரிகிறார்கள். பயனுள்ள மரங்களையும், கன்று களையும், செடிகளையும் நட்டு சுற்றுச்சூழல் காத்திடும் முகத்தான், விருட்ச கன்றுகளை பக்தர்களுக்கு வழங்கி பசுமைப் புரட்சியையும் புகுத்தி நடத்தி வருகிறார்கள்.  இந்த பொது நல வளாகத்தில் சற்றேறக் குறைய முப்பதிற்கும் மேலான அரியவகை மூலிகைகள் இயற்கையாக வளர்ந்து வருவது பெருஞ் சிறப்பு.
இவ்வளவு சீரிய தொண்டு முயற்சிகள் அத்தனையும் நடைபெறுவது, சிறிய கீற்றுக் கொட்டகையை அலுவலக மையமாகக் கொண்டுதான். இத்திருக் கோயிலின் கட்டிடப்பணி பாபாவின் அருளாலே, முதிர்ந்த கட்டிடக்கலை வல்லுனரின் சிறந்த வழிகாட்டலுதடனும், ஈடுபாடான நேரடி கண்காணிப் பிலும் மிகச்சிறிய முறையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.கட்டிடத்தின் உத்தேசமான பரப்பளவு 20,000 ச.அடிகள், இரண்டு தளங்களாக, கீழ்பரப்பில், சத்தியநாராயணர் - பாபா - தாத்ரேயர் என மூவரும் அமையப்பெற்ற தூண்களே இல்லாது மிக விஸ்தீரணமான தியான மண்டபமும், முதல் தளத்தில் பாபாவை பக்தர்கள் தரிசிக்கும் மண்டபமுமாக கட்டிடப் பணி நாளொரு மேனியாக நடந்தேறி வருகிறது. எல்லாம் வல்ல பாபாவின் அருளாலும், சாய் அன்பர் களின் ஒட்டுமொத்த பேரெதிர்பார்ப்பின்படியும் கூடிய விரைவில் கட்டுமானப் பணிகள் நிறைவேறி, பாபாவை புதிய கட்டிடத்தில் தரிசிக்க அருள்பாலிக்க அனைத்து சாய் அன்பர்களும் வேண்டி வருகிறார்கள். இந்த புதிய கட்டிட வளாகத்தின் கட்டுமானப்பணி தொடங்கிய நல்வேளையிலே, நடந்த அற்புத சம்பவம் ஒன்றும் குறிப்பிடத்தக்கது. சுயம்பு பாபா தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் காட்சியளித்தார். அந்த சுயம்பு பாபா, தற்போது குருஸ்தானில் அமைந்துள்ள பாபா அருகில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்மழை பொழிவது விசேடமானது. இந்த ஸ்ரீரெங்க சாயியின் அற்புதங்களும், மகிமைகளும் எழுத வேண்டுமெனின், தனியான பல் பெருங்கட்டுரைகளாக அமையும். எனினும், வாசக அன்பர்களின் நலனுக்காகவும், விவரத்திற்காகவும், சில சம்பவங்களை சுருங்கக் கூறுதல் பொருந்தும்.
1.  ராஜமாணிக்கம் என்ற சாய் அன்பர் விபத்தில் கண்களின் பார்வையை இழந்தவர். அவரது வாழ்வில் சாய் மகராஜ் லீலைகளை செய்து, கண் பார்வையை திடீரெனக் கொடுத்து அனைவரையும் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்திவிட்டார் என்பது பேருண்மையாகும்.
2. வெகுகாலமாக குழந்தை செல்வமில்லாது,ஏங்கித் தவித்த மருத்துவ தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து நம்பிக்கையை மெய்யாக்கி, நலவாழ்வையும் அளித்துதவியது விந்தை என்கிறார்கள், மருத்துவ தம்பதிகள்.
3. பல மாதங்களாக, பல சிகிச்சைகளும் செய்து பலனின்றிப்போன, புகையிலை பழக்கத்தால் ஏற்பட்ட, நாக்கு அழுகிவிட்ட வாய் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட சிறுவயது சாய் அன்பருக்கு பாபாவின் அருளினால், பரம்பரை சித்தவைத்தியச் சிகிச்சை செய்விக்கப்பட்டு இவ்வறக்கட்டளையினால் புனர்வாழ்வு அளித்து புதுப்பொழிவும், நல்வாழ்வையும் மீட்டுக்கொடுத்தது, பெருமகிழ்வும், ஆனந்த முமாகும்.
4. இரு கண் பார்வையையும் இழந்து, அறுவை சிகிச்சைக்கு பயந்து, மறுத்து பார்வையற்று பயணித்த அருமை சகோதரிக்கு தைரியமும்,பலமும், ஆதரவும் கொடுத்து அறுவை சிகிச்சை செய்து வைக்கப்பட்டு வியப்பூட்டும் வண்ணம் பல்லாண்டிற்கு பிறகு பார்வை கொடுத்து ஒளியூட்டிய ஒளிச்சித்தர் பாபாவிற்கு அந்த சாய் அன்பர் நன்றி கூறி கண்ணீர் பெருக்கெடுத்துப் பொழிவது, நவில இயலாத பேரானந்த உணர்வுதான் என்கிறார்கள் மருத்துவரும் - சார்ந்தவரும்.
5. ஸ்ரீரெங்கசாய் பொதுவளாகத்தின் அன்புப் பிராணி உயர்திரு திரு ஜானி அவர்கள் நோய்வாய்ப்பட்டு, வைத்தியங்களுக்கு அப்பாலும், உணவின்றி, உறக்கமின்றி, ஊக்கமின்றி, தோல்நீங்கி , நடைஉடை குன்றி, கால் ஒடிந்து, வால் ஆட்டலும் ஓய்ந்து, செயலிழந்து இருந்தபோது சாய் அன்பர்கள் விரும்பியபடி பழைய ஆக்கமும், ஊக்கமும் கொடுத்துத் தேற்றி, உலவிட மீண்டும் வலம் வரச்செய்த பெருந்தகையின் அருங்கருணையும், அருளும், நீர்மல்கும் குணத்தது என்கிறார்கள் சாய் அன்பர்கள்.

இந்த ஸ்ரீரெங்கசாய் அறக்கட்டளையின் அனைத்து ஆக்கபூர்வமான காரியங் களும், நலத்திட்டங்களும் மிகுந்த அர்ப்பணிப்போடும் ஆன்மீக நாட்டத் தோடும், சாய் அன்பினை நாடிவரும் சாய் அன்பர்களின் ஒட்டுமொத்த பூர்வாங்க தியாகத்தாலும், அர்ப்பணிப்பாலும், செயப்படுவினையாக இயங்கி வருகிறது.
இந்த புனித பொதுநல வளாகத்தை நிர்மாணம் செய்து, சாய் அன்பர்களுக்குக் கலியுகத்தில் வினையறுத்து, ஆன்ம பலம்பெற்றிட முக்கிய பங்களிப்பாக, மகா புண்ணியமான நில வளாகத்தை, பொது நலத்திற்காக அர்ப்பணித்துள்ள ஸ்ரீரெங்கச்செம்மல், பல் மருத்துவர் அமரர் சிற்றம்பலம் அவர்களின் குடும்பத்தைக் குறிப்பிடாது விட்டால் கட்டுரை இத்தருணத்தில் நிறைவுற்றதாக அமையாது.

" எனையெவர் விரும்பினாலும், எனையெவர் காண்கிறாரோ;                         எனையெவர் தியானம் செய்து,  என்னிடம் சரண டைந்தால்;                       முனைந்துதான் கடனாள ஆவேன், முனைந்துதான் கடனைத் தீர்ப்பேன்! தனையுணர்ந் திடவே வைத்து, தடையிலா(து) உள்ளம் சார்வேன்!                             - இது பாபாவின் அமுதமொழி -
வாழ்க ஸ்ரீரெங்கசாய் நாமம் ! வளர்க சாய் பக்தி !

No comments:

Post a Comment